இந்து மத புராணங்களில் மனித வாழ்க்கை நிலையற்றது, மரணம் தவிர்க்க முடியாதது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டாலும், இறைவனின் விசேஷ அருளால் சிலர் மட்டும் மரண எல்லையைத் தாண்டி என்றும் உயிருடன் பூமியில் வாழ அனுமதி பெற்றவர்கள் என கூறப்படுகிறது. இவர்களே ‘சிரஞ்சீவிகள்’ என அழைக்கப்படுகின்றனர். ‘சிரம்’ என்பது தலை என்றும், ‘ஜீவன்’ என்பது உயிர் என்றும் பொருள் பெறும் நிலையில், உடலோடு உயிர் நிலைத்திருப்பவர்கள் என்பதே சிரஞ்சீவி என்ற சொல்லின் விளக்கம். இவ்வாறு இன்றளவும் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் எட்டு மகத்தான ஆத்மாக்கள் ஒன்றிணைந்து ‘அஷ்ட சிரஞ்சீவிகள்’ என புராணங்களில் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களின் நாமங்களை தினந்தோறும் நினைத்து உச்சரிப்பது நீண்ட ஆயுள், குடும்ப நலம், நோய் மற்றும் அபாயங்களில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அஷ்ட சிரஞ்சீவிகளில் முதன்மையானவராக கருதப்படுபவர் ஸ்ரீராமரின் பரம பக்தனான அனுமன். எந்த சுயநலமும் இல்லாமல், ராம சேவையே தனது வாழ்க்கை எனக் கொண்ட அனுமன், பெரும் வீரச் செயல்களை நிகழ்த்தியபோதும் தன்னை எப்போதும் பணிவாளனாகவே எண்ணினார். லங்கையை எரித்த வீரனாக இருந்தாலும், ராமரின் திருவடிகளில் அடங்கி நின்ற பக்தியாகவே அவர் போற்றப்படுகிறார். ராமாயண யுத்தம் முடிந்த பின், ஸ்ரீராமர் “என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் நீ இருப்பாய், இந்த பூமியில் நீ என்றும் வாழ்வாய்” என அனுமனை ஆசீர்வதித்ததாக கூறப்படுகிறது. அதனால் இன்றும் ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடங்களில் அனுமனின் அருள் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
தர்மத்தின் குரலாக விளங்கும் வேதவியாசர், மகாபாரதம் போன்ற மகாகாவியத்தை உலகிற்கு அளித்த மகான். மகாபாரதம் ஒரு இலக்கியமாக மட்டுமல்லாது, மனித வாழ்வுக்கான தர்மக் கையேடாக கருதப்படுகிறது. விநாயகரால் எழுதப்பட்ட அந்தப் பெருங்காவியத்தை வியாசர் சொல்லி வழங்கினார் என்பது புராண நம்பிக்கை. அந்த மகத்தான தர்மப் பணிக்காகவே, வியாசர் பூமியில் இருந்து தர்மத்தை பாதுகாக்கும் பொறுப்புடன் சிரஞ்சீவியாக வாழும் வரம் பெற்றார் எனவும், இன்றும் ஹிமாலயப் பகுதிகளில் அவர் தவம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ராவணனின் தம்பியாகப் பிறந்த விபீஷணன், அசுர குலத்தில் இருந்தபோதும் அதர்மத்தை ஏற்காமல் நீதியின் பாதையைத் தேர்ந்தெடுத்தவர். அண்ணன் என்ற உறவை விட, தர்மமே உயர்ந்தது என்ற நிலைப்பாட்டுடன் ஸ்ரீராமரின் பக்கம் நின்ற ஒரே அசுரன் விபீஷணன். அவரது அந்த நேர்மை மற்றும் தர்மநிலைக்காக, ஸ்ரீராமர் அவரை சிரஞ்சீவியாக ஆசீர்வதித்தார். அதனால் இலங்கை அரசாட்சியின் தர்ம சக்தியாக விபீஷணன் இன்றளவும் உயிருடன் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
அசுர குலத்தில் பிறந்தாலும், தேவகுணம் கொண்ட மன்னனாக விளங்கிய மகாபலி, தனது ஆட்சியில் ஏழை–பணக்காரன் என்ற வேறுபாடே இல்லாத சமத்துவ சமூகத்தை உருவாக்கியவர். அவரது நீதியான ஆட்சி தேவர்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு, மகாபலியை பாதாள உலகிற்கு அனுப்பினார். ஆனால் அது தண்டனையாக அல்ல; அமர வாழ்வும், ஆண்டுக்கு ஒருமுறை தனது மக்களை சந்திக்கும் அனுமதியும் வழங்கப்பட்ட வரமாகவே அமைந்தது. அந்த நாளே இன்றும் கேரளாவில் ஓணம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்ற சொல்லின் முழு அர்த்தத்தையும் வாழ்வில் நடைமுறைப்படுத்தியவர் பரசுராமர். தந்தையின் ஆணையை நிறைவேற்றும் போது ஏற்பட்ட வேதனைகள், பின்னர் தவ வலிமையால் தாயை மீட்ட அதிசயம் ஆகியவை அவரின் வாழ்க்கையை தனித்துவமாக்குகின்றன. மகாபாரதத்தின் முக்கிய வீரர்களான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோருக்கே குருவாக விளங்கிய பரசுராமர், ராமாயணமும் மகாபாரதமும் ஏற்றுக் கொண்ட சிரஞ்சீவியாக போற்றப்படுகிறார்.
சிவபக்தியின் உச்சத்தை எடுத்துக்காட்டும் மார்கண்டேயன், பிறந்தபோதே 16 வயது தான் ஆயுள் என விதி எழுதப்பட்ட குழந்தை. ஆனால் அந்த விதியை மாற்றியது அவரது தீவிர சிவபக்தி. எமன் உயிரைக் கவர வந்தபோது, மார்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டியணைத்தான். எமனின் பாசக்கயிறு சிவன் மீது விழுந்ததால், சிவன் கோபம் கொண்டு எமனை தண்டித்தார். இதன் மூலம் மார்கண்டேயன் என்றும் 16 வயதுடன் வாழும் வரம் பெற்ற சிரஞ்சீவியாக ஆனார்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஒரே நேரத்தில் கல்வி அளித்த ஆசானாக விளங்கியவர் கிருபாசாரியார். போரில் கௌரவர் பக்கம் இருந்தபோதும், தர்மத்தை ஒருபோதும் விட்டுக்கொடாதவராக அவர் போற்றப்படுகிறார். மகாபாரதப் போருக்குப் பின்னர், பரீட்சித் மன்னரின் அரசகுருவாக பணியாற்றிய கிருபாசாரியார், சமநீதியின் சின்னமாக சிரஞ்சீவிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
துரோணரின் மகனான அஸ்வத்தாமன், தந்தை வஞ்சகமாக கொல்லப்பட்ட வேதனையில், பெரும் பாவச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாண்டவர்களின் புதல்வர்களைக் கொன்றதும், உத்தரையின் கருவை அழிக்க முயன்றதும் மிகப் பெரிய பாவங்களாகக் கருதப்பட்டன. இதற்குத் தண்டனையாக, அவருக்கு மரணம் மறுக்கப்பட்டு, தீராத காயங்களுடன் உலகமெங்கும் அலைந்து திரியும் சாபம் விதிக்கப்பட்டது. அதனால் இன்றும் அஸ்வத்தாமன் இந்த பூமியில் உயிருடன் அலைந்து கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்த எட்டு அஷ்ட சிரஞ்சீவிகளின் சிற்பங்கள், நேபாளத்தின் காட்மண்டுவில் உள்ள நக்சல் பகவதி கோயிலில் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்பது புராண வரலாற்றில் குறிப்பிடத்தக்க தகவலாக கருதப்படுகிறது.