Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

சதுரகிரி சிவனே சிவனே சந்தண மகாதேவா தேவா… பாடல்

சதுரகிரி சிவனே சிவனேசந்தண மகாதேவா தேவாசுந்தர மகாலிங்கமே லிங்கமேஎன்றும் தஞ்சம் உன் பாதமே பாதமேசிவ சிவ சிவ சிவ சதுரகிரிஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்கேட்குது கேட்குது நமசிவாயபறக்குது பறக்குது பாவமெல்லாம்ஓம் சிவனே ஹரிஹர சிவனேநம...
HomeHistoryஉபவேதங்கள் எவை? வேதங்களாகிய நான்மறைகள்

உபவேதங்கள் எவை? வேதங்களாகிய நான்மறைகள்

உபவேதங்கள் எவை?

வேதங்களாகிய நான்மறைகள் – ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்கள் – நம் அனைவருக்கும் அறிந்தவை. ஆனால், உபவேதங்கள் குறித்த அறிவு பொதுவாகப் பலருக்கும் குறைவு. உபவேதங்கள், வேதங்களின் துணை நூல்களாகவும், இந்து சமயத்தில் ஸ்மிருதி நூல்கள் எனப்படும் பிரிவுக்குள் அடங்கியவையாகவும் கருதப்படுகின்றன.

உபவேதங்கள் மொத்தம் நான்கு எனப் பொதுவாகக் கூறப்பட்டாலும், சில சமயங்களில் ஐந்தாகவும் கொள்ளப்படுகின்றன. அவை:

உபவேதங்கள் என்னென்ன?

  1. தனுர்வேதம் – போரியல் மற்றும் தற்காப்பு அறிவியல்
  2. காந்தர்வ வேதம் – கலை மற்றும் இசை தொடர்பான அறிவியல்
  3. ஆயுர்வேதம் – மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய அறிவியல்
  4. ஸ்தபத்ய வேதம் – கட்டடக் கலை மற்றும் வாஸ்து சார்ந்த அறிவியல்
  5. அர்த்தசாஸ்திரம் – அரசியல், பொருளாதாரம் மற்றும் நிர்வாக அறிவியல் (சில சமயங்களில் ஸ்தபத்ய வேதத்திற்கு பதிலாக இதையே உபவேதமாகக் கொள்ளுவர்.)

1) தனுர்வேதம்

“தனு” என்பது வில்; “வேதம்” என்பது அறிவு. எனவே தனுர்வேதம் என்பது வில்வித்தை, போர்க்கலை, தற்காப்புக் கலைகள் ஆகியவற்றின் முழுமையான அறிவாகும். இது ரிக் வேதத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

இந்தியப் பாரம்பரிய நூல்களில் ஆயுதங்களோடு நடத்தப்படும் போரியல் மற்றும் ஆயுதமின்றி செய்யப்படும் சண்டைக் கலைகள் இரண்டும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

  • ஆயுதமின்றி சண்டை: மல்யுத்தம் என அழைக்கப்படுகிறது. எதிரியின் நெஞ்சத்தை முட்டிக்கால் கொண்டு தாக்குதல், தலையில் குத்துதல், கழுத்தை வலுவாகப் பிடித்து கீழே வீழ்த்துதல் போன்ற பல முறைகள் மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. பீமனும் ஜராசந்தனும் 27 நாட்கள் தொடர்ந்து மல்யுத்தத்தில் ஈடுபட்ட சம்பவம் புகழ்பெற்றது.
  • ஆயுதத்துடன் சண்டை: வில், வேல், வாள், கேடயம், சிலம்பம் போன்ற பல்வேறு ஆயுதங்களின் பயன்பாடு குறித்தும் விரிவான விவரங்கள் உள்ளது.

அக்கினி புராணம் “ரத–கஜ–துராக–பதாதி” எனும் நான்கு வகையான படைகளைக் குறிப்பிடுகிறது – தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, கால்படை. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பயிற்சிகள் சொல்லப்பட்டுள்ளன.

பண்டைய மன்னர்கள் அனைவரும் தனுர்வேதத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவே இருந்தனர். பிற்காலத்தில் முஸ்லீம் படையெடுப்புகள் அதிகரித்தபோது, சாதாரண மக்கள் கூட தற்காப்புக் கலைகளை கற்றுக்கொண்டனர். வில்வித்தை, தேரோட்டம், குதிரைப் பந்தயம், மல்யுத்தம், சிலம்பம் போன்றவை அப்போது புகழ்பெற்ற வீர விளையாட்டுகளாக விளங்கின.

புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் போரியல் முறைகள் குறித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் சுஷ்ருத சம்ஹிதை நூலில் மனித உடலில் உள்ள 107 முக்கிய புள்ளிகளைத் தாக்கினால் ஏற்படும் விளைவுகள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது வர்மக்கலை உடன் தொடர்புடையது.

ஆனால், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் களரி, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள் தடைசெய்யப்பட்டன. மக்களை போர்திறமையற்றவர்களாக மாற்றினால் ஆட்சிசெய்வது எளிதாகும் என்பதே காரணம். இதனால் இன்றைய காலத்தில் இக்கலைகள் மறைந்து போகும் நிலையில் உள்ளது.

உபவேதங்களின் பட்டியல்


2) காந்தர்வ வேதம்

“காந்தர்வம்” என்பது கலை. காந்தர்வ வேதம் இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளைப் பற்றியது. இது சாம வேதத்தின் உபவேதமாகக் கருதப்படுகிறது.

நாட்டிய சாஸ்திரம், பரத முனியால் இயற்றப்பட்டு 6,000 ஸ்லோகங்களை உடையது, காந்தர்வ வேதத்தின் அடிப்படையில் தோன்றியது. ஆனால் காந்தர்வ வேதம் சுமார் 36,000 ஸ்லோகங்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதன் நோக்கம் உலகில் அமைதி நிலவவும், இயற்கையில் சமநிலை காத்துக் கொள்ளவும் வழிகாட்டுவதாகும். பல்வேறு இசைக்கருவிகள், ராகங்கள், இசை வடிவங்கள், நாடகக் கோட்பாடுகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.


3) ஆயுர்வேதம்

“ஆயுஸ்” என்பது நீண்ட ஆயுள்; “வேதம்” என்பது அறிவு. எனவே ஆயுர்வேதம் என்பது மனித உடல்நலம், நீண்ட ஆயுள், மருத்துவம் தொடர்பான முழுமையான அறிவாகும்.

இந்தியாவில் தோன்றிய மிகவும் பழமையான மருத்துவ முறையாகும். சரக சம்ஹிதை, சுஷ்ருத சம்ஹிதை ஆகியவை இதன் அடிப்படை நூல்கள்.

ஆயுர்வேதம் மனித உடலில் மூன்று முக்கிய தத்துவங்களைச் சொல்லுகிறது:

  • வாதம் – உடலின் இயக்க சக்தி
  • பித்தம் – வெப்பம் மற்றும் செரிமானம்
  • கபம் – உறுதி மற்றும் நிலைத்தன்மை

மேலும் ஆயுர்வேதம் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது:

  • சல்யம் – அறுவை சிகிச்சை
  • சாலக்யம் – கண், காது, மூக்கு சிகிச்சை
  • காயசிகிச்சை – உடல் நோய் குணப்படுத்தல்
  • பூதவித்யை – மனநல சிகிச்சை
  • குமாரப்ரிய – குழந்தை மருத்துவம்
  • அக்தம் – முறிமருந்துகள்
  • இரசாயனம் – ஆயுள் நீட்டிப்பு மருந்துகள்
  • வாஜீகரணம் – புத்துயிர்ப்பு மருத்துவம்

ஆயுர்வேதத்தின் கடவுள் தன்வந்திரி எனப் போற்றப்படுகிறார். சுஷ்ருதர், சரகர், வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் இத்துறையின் தலைசிறந்தவர்கள்.


4) ஸ்தபத்ய வேதம்

“ஸ்தபத்யம்” என்பது “நிலைநாட்டுதல்” எனப் பொருள். எனவே ஸ்தபத்ய வேதம் என்பது கட்டடக் கலை மற்றும் வாஸ்து சார்ந்த அறிவு.

இயற்கையோடு இசைந்தவாறு கட்டிடங்களை எழுப்ப வேண்டும் என்பதே இதன் அடிப்படை கொள்கை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற பண்டைய கோவில்கள் அனைத்தும் ஸ்தபத்ய வேதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை.

இதன் முக்கியக் கொள்கைகளில் ஒன்று – வீட்டின் வாசல் கிழக்குநோக்கி இருக்க வேண்டும். ஏனெனில் காலை சூரிய ஒளி உடலுக்கு விட்டமின் D அளிக்கிறது.

ஸ்தபத்ய வேதம் இன்றைய வாஸ்து சாஸ்திரத்துடன் தொடர்புடையது. ஆனால் தற்போது பலர் வாஸ்துவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இது இயற்கைச் சக்திகளுடனான ஒத்திசைவு என்பதே நோக்கம்.


5) அர்த்தசாஸ்திரம்

“அர்த்தம்” என்பது பொருள். அர்த்தசாஸ்திரம் என்பது அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றிய நூல். இதன் ஆசிரியர் சாணக்கியர் (கௌடில்யர்/விசுணுகுப்தர்). இவர் 2300 ஆண்டுகளுக்கு முன் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் அறிஞராக இருந்தார். பின்னர் மௌரியப் பேரரசின் பிரதமராகப் பதவி வகித்தார்.

அர்த்தசாஸ்திரம் மொத்தம் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில்:

  • அரசு அமைப்பு, நிர்வாக முறை
  • சட்டங்கள்
  • உளவுத்துறை
  • அரசவையின் நடத்தை
  • அயல் நாட்டுக் கொள்கைகள்
  • போர்தந்திரம்
  • இரகசிய நடவடிக்கைகள்

என்பன அடங்கியுள்ளன.

ஒரு அரசன் எப்படி இருக்கவேண்டும் எனவும் இதில் கூறப்பட்டுள்ளது:

  • பிறர் மனைவியுடன் தொடர்பு கொள்ளக் கூடாது
  • பிறர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது
  • அகிம்சை கடைபிடிக்க வேண்டும்
  • வஞ்சகம், ஊதாரித்தனம், தீய செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்

இதுபோன்ற பல சிறப்பான கருத்துகளை அர்த்தசாஸ்திரம் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here