இந்துக்கள் செய்துவைத்த ஏற்பாட்டில் எல்லாமே ஞானமானவை, எல்லாமே ஆழ்ந்த தத்துவ பயிற்சிகளின் மூலம், அவர்களின் கோவில் முதல் விளையாட்டுவரை ஒவ்வொன்றும் வாழ்க்கையின் பெரும் தத்துவம்
அதுவும் விஷேஷ நாட்களில் அவர்கள் சொல்லிகொடுத்த விளையாட்டுக்கள், அவர்கள் பயிற்றுவித்த விளையாட்டுக்கள் அவ்வளவு அற்புதமானவை, வாழ்வியல் பாடங்களை பக்தியோடு போதிப்பவை
அப்படி அவை சொக்கட்டானை சொன்னது , சதுரங்கத்தை சொன்னது, மிக முக்கியமாக பரமபதம் எனும் பாம்பும் ஏணியும் கலந்த விளையாட்டை சொன்னது
அந்த விளையாட்டு வெறும் பொழுது போக்கு அல்ல, அது வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் வலியுறுத்தும் பாடம்
ஏணி என்பது ஒருவனுக்கு வாய்க்கும் குடும்பம் , கல்வி, செல்வம், அவன் உழைப்பு, வாய்ப்பு என்பதை சொல்வது
பாம்பு என்பது அவன் மனதில் வரகூடாததும், வாழ்வில் சேர்க்க கூடாத தீயவர்கள் மற்றும் தீய பழக்கங்களை சொல்வது
ஏணி என்பது அவனின் நல்ல பக்கத்தை சொல்வது அது ஒருவனை ஏற்றிவிடும்
தீயவர் தொடர்பும்,தீய குணமும் ஒருவனை கீழே தள்ளிவிடும் அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதையும் சொல்வது
அதே நேரம் வெற்றியில் ஆடாதே மறுநேரம் வீழ்வாய், தோல்வியில் துவளாதே மறுபடியும் எழுவாய் என்பதை கற்று கொடுத்தது
மிக மிக முக்கியமாக இந்த ஆட்டம் நீ விரும்பியபடி அல்ல, தாயம் விழுவதை பொறுத்தே அமையும் அப்படி வாழ்வு தெய்வம் விரும்புவதை பொறுத்தே அமையும் என வாழ்வில் எது நடந்தாலும் ஏற்றுகொள்ளும் பக்குவத்தை கொடுத்தது
வாழ்வு என்பது மானிடனுக்கு அவன் விரும்பியது அல்ல, மாட்டை இயக்கும் விவசாயி போல எங்கோ இருக்கும் பரம்பொருளின் மாயகரங்களால் இயங்குவதே மானிட வாழ்வு என்பதை அது தாயத்தை காட்டி சொல்லிற்று
அடி விழ்நுதால் பொறுத்துகொள், வெற்றிபெற்றால் ஆடாதே என்பதையும் அது காட்டிற்று
தாயத்தால் செல்லும் பரமபதம் போல இறைவன் எழுதிய விதியால் இயங்கும் வாழ்வு இது என்பதை அது போதித்தது
ஏ பரம்பொருளே தீமையில் என்னை தள்ளாதே, வாழ்வில் எந்த பாம்பு வாய் போன்ற சூழலிலும் என்னை சிக்கவிடாதே என அது மன்றாட சொல்லிற்று
அப்படியே வீழ்ந்தாலும் காலம் பார்த்து என்னை கைதூக்கிவிடு என கதற சொல்லிற்று
பெரும் பாம்பிடம் வீழ்ந்தாலும் நொடியில் ஏணியில் ஏற்றிவிட உன்னால் முடியும் என நம்பிக்கையோடு கேட்க சொல்லிற்று
வாழ்வு என்பது இன்பம் துன்பம் கலந்தது, ஏற்ற இறக்கம் கொண்டது, ஏமாற்றமும் மகிழ்ச்சியும் கொண்டது, அங்கு நிலையானது என எதுவுமில்லை, எல்லா நிலையும் சடுதியில் மாறும் என்பதை அந்த பரமபதம் போதித்தது
வாழ்வு வினோதமானது அங்கு வேண்டியது கடவுள் மேல் நம்பிக்கையும், எல்லா சூழலும் மாறும் தெய்வ அருளால் எல்லா தடையும் தாண்டலாம் எனும் நம்பிக்கையினை போதித்தது
இந்த போதனைமிக்க விளையாட்டுக்கள் அன்றே குழந்தைகளின் நம்பிக்கையினை வளர்த்தன, மன உறுதியினை வளர்த்தன
இப்படி விளையாட விளையாட அடுத்து அடுத்து முயலலாம் கடவுள் மேல் பாரத்தை போட்டு அடுத்து ஆரம்பிக்கலாம் எனும் நம்பிக்கையினை கொடுத்தது
அந்த தலைமுறை மிகுந்த பக்தியும் தன்னம்பிக்கை கொண்ட சமூகமாய் இருந்தது
அன்று மனநல மருத்துவர் இல்லை, மனம் கெடுக்கும் மருந்துகள் இல்லை, தற்கொலைகள் இல்லை, போதை வஸ்துக்ளில் ஆறுதல் தேடி சீரழியும் கலாச்சாரமில்லை
மன அழுத்தம், மன இறுக்கம் என்பதெல்லாம் யாரும் கேள்விபட்டதுமில்லை
எல்லா இந்துகுழந்தைகளும் மன நம்பிக்கை , உற்சாகம் முழு பலத்தோடு வளர்ந்தார்கள், எல்லா சூழலிலும் தாக்குபிடித்தார்கள்,எந்த கொடிய சூழலும் அவர்களை அசைக்கவுமில்லை, கோடி பணத்தில் அவர்கள் ஆடவுமில்லை
அப்படி ஒரு அருமையான வாழ்க்கை வாழ்ந்தார்கள்
என்று குழந்தைகளுக்கு இவை எல்லாம் இல்லமால் போனதோ, கல்வி முறை வாழ்வியல் வீடு குடும்பம் என இவை விடைபெற்றதோ அப்போதே மனபலம் அற்ற,குழப்பமான, நடுக்கமான, எதையும் எதிர்கொள்ள முடியாத, சிறிய பிரச்சினைக்கும் நத்தைபோல் ஆமை போல் முடங்கும் தலைமுறை உருவாகிவிட்டது
முன்னோர்கள் செய்துவைத்த ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை
வைகுண்ட ஏகாதசி அன்று பரமப்தம் விளையாடுதல் என்பது பொழுதுபோக்கோ இல்லை தூக்கம் வராமல் இருக்கும் விளையாட்டோ அல்ல
அது பக்தியும் அது கொடுக்கும் நம்பிக்கையும் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதையும், வாழ்வு என்றால் என்ன அங்கே எப்படியான சூழல் எல்லாம் வரும் அதையெல்லாம் கடப்பது எப்படி என்பதையும் சொல்லி கொடுத்த விளையாட்டு
பகவான் அருளுடன் ஓயாத முயற்சியுடன் கடும் விழிப்புடன் அவன் கரம் பிடித்து அவனால் நடத்தபட்டு கடைசியில் மோட்சம் அடைய வேண்டும் எல்லா நிலையிலும் அவன் கரம் மட்டுமே நம்மை வழிநடத்தும் என்பதை மிக மிக அழகாக மனதில் பதியவைக்கும் பக்தி முயற்சி
எல்லா இரவுகளும் வைகுண்ட ஏகாதசி இரவாகிவிடாது அது பல போதனைகளை படிக்க வேண்டிய இரவு
இந்த இரவில் வீடுகளில் சிறுவர் சிறுமியருடன் இந்த விளையாட்டை விளையாடுங்கள், அதன் அர்த்த்மும் தாத்பரியமும் சொல்லிகொடுத்து விளையாடுங்கள்
இவையெல்லாம் இந்து தர்மம் சொன்ன ஞான பொக்கிஷங்கள், வாழ்வினை வளபடுத்தும் மன்வோவியல் பயிற்சிகள்
அதை இளம் வயதிலே குழந்தைகளுக்கு சொல்லிகொடுங்கள், அக்குழந்தைகள் சனாதன தர்மத்திலும் இன்னும் பக்தியில் தேர்ந்து வளரவும், வாழ்வின் எல்லா சூழலையும் பக்தியோடு முயற்சியோடு கடந்துவரவும் எந்த சிக்கலிலும் சிக்காது அவை நல்வாழ்வு வாழவும் பகவான் அருள் புரிவார்
வாழ்வில் மானுடன் கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு மானுட நிலையில் இருந்து தெய்வநிலைக்கு உயர எவ்வளவு போராட்டம் வரும், குறைந்தபட்சம் லவுகீக வாழ்வில் எவ்வளவு சிக்கல் வரும் அதை பொறுமையாக எதிர்கொள்வது எப்படி என்பதை அதுதான் போதிக்கும்
சூழல் மாறும்போது காலம் மாறும்போது எல்லாம் மாறும் அதனால் இதுதான் நிலையானது என எண்ணி கலங்காதே எனும் ஆறுதலும் நம்பிக்கையும் அதுதான் தரும்
அப்படியே நன்மையும் தீமையும் நிறைந்ததுதான் உலகம், எல்லா இடமும் இங்கு நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் இது விதி, அப்படியே நம் மனதிலும் நன்மையான சிந்தனையும் உண்டு நம்மை வீழ்த்தும் தீய சிந்தனையும் உண்டு, எவ்வளவுதான் நம்மை தீய சிந்தனைகள் பிடித்து இழுத்தாலும் பகவான் மேல் பாரத்தினை இட்டு காலத்தினால் நல்ல சிந்தனைகளை பிடித்து உய்ய வேண்டும், அப்படியே மேலேறி இறைவனை அடையவேண்டும் நம் மனதின் நல்ல சிந்தனைகளால் அவைகளை இறைவன் அருளால் பாதுகாத்து மேலேறிவிட வேண்டும் என்பதை சொல்லும் தத்துவமும் இதுவே
வாழ்க்கையினை இறைவனிடம் ஒப்படைத்துவிடு, அவன் விளையாடும் விளையாட்டினை அமைதியாக பார், வேறு ஒன்றும் நீ செய்துவிடமுடியாது அவன் தந்தால் பெற்றுகொள், அவன் எடுத்தால் பொறுத்துகொள் ஆனால் அவனைமட்டும் விட்டுவிடாதே ஒரு நாள் அவன் உன்னை எல்லாம் கடந்த பெருநிலைக்கு உயர்த்துவான் என்பதை பொருத்தமாக இந்நாளில் சொல்லும் விளையாட்டு இது
இந்நாளில் அந்த விளையாட்டு முக்கியம், அதை விளையாடும் வீடுகளில் பகவானின் அருள் நிரம்பி எல்லோர்க்கும் நல்ல மனபலமும் நற்பக்தியும் பெருகும் என்பது நிச்சயமான உண்மை